திருகோணமலையில் உள்ள விநாயகர் கோவில் ஒன்றில் இந்தியா கும்பகோணத்திலிருந்து வந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் கொண்ட குழிவினர் மேற்கொண்ட ஆய்வில் அந்த கோவிலில் இருப்பது இராஜ இராஜ சோழர் கல்வெட்டுக்களில் ஒன்று என தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.
முகப்புத்தக பதிவு ஒன்றையிட்டு குறித்த குழுவில் ஒருவரும், மகா சோழர்கள் வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் தலைவருமான உதய ஷங்கர் என்னும் ஆய்வாளர் இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.
அவர் அந்த பதிவில் தெரிவிப்பதாவது,
இன்று (24.5.2025) இலங்கையில் கடைசியாக பார்த்த கல்வெட்டு நிலாவெளி எனும் ஊரில் உள்ள ராஜராஜ சோழர் கல்வெட்டு தான். இதுவரை இலங்கையில் பார்த்த ராஜராஜர் கல்வெட்டுகளில் இது தான் காலத்தால் முற்பட்டது.

ராஜராஜரின் எட்டாவது ஆட்சியாண்டு அதாவது கி.பி.993 வருடத்தைய கல்வெட்டு. அப்போதே திருகோணமலையை சுற்றியுள்ள பகுதிகளும் சோழர்கள் வசம் வந்து விட்டதை இது காட்டுகிறது.
‘நிலாவெளி’ ஆகா என்ன அழகிய தமிழ்ப் பெயர். ஊரும் அழகு தான் அவ்வூர் மக்களும் அழகு தான். அங்குள்ள விநாயகர் கோவிலைத் தேடிச் சென்று கல்வெட்டைப் பார்த்த போது அங்கிருந்த மக்களெல்லாம் கூடி நின்று ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இத்தனை வருடம் இக்கோவிலுக்கு வருகிறோம் இது ராஜராஜர் கல்வெட்டு என்று தெரியவில்லை என அம்மக்களும் கோவிலின் அர்ச்சகரும் கூட பகிர்ந்துக் கொண்டனர். கல்வெட்டை படிக்க வீட்டிலிருந்து மைதா மாவு கொண்டு வந்து கொடுத்து உதவினர்.
கல்வெட்டுச் செய்தி: அவ்வூரின் 250 வேலி நிலம் அனைத்தும் கோணபர்வதத்தில் (திருகோணமலை) உள்ள மச்சகேஸ்வரத்தின் நீலகண்டனான சிவனுக்கு சொந்தமானதாகவும் அந்த நிலத்தின் பகுதிகளைக் குறிப்பிடும் போது கீரிகண்டகிரிகாமம், ஊரக்கிரிகாமம் என்றும் அதன் எல்லைகளாக கடலும், எட்டகாம்பே எனும் ஊரும், சூலக்கல்லும் குறிப்பிடப்படுகின்றன. திருகோணமலை அழகான தமிழில் “கோணபர்வதம்” எனக் குறிப்பிடப்படுவது கல்வெட்டின் தனிச்சிறப்பு!
சூரியன் மறைந்த பின்பு அவ்வூரைத் அடைந்துப் பின் கோவிலைக் கண்டுபிடித்து கல்வெட்டையும் படிக்க முடிந்ததில் நம் குழுவினருக்கு மிக்க மகிழ்ச்சியே….😍😍😍
பல அற்புதமான சோழர் கல்வெட்டுக்களை இலங்கையில் தேடிக் கண்டறிய முடிந்த சிறப்பான நாளாக இன்று அமைந்ததற்கு ராஜராஜரின் ஆசியே காரணம் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!❤❤❤
என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
