வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததாகக் கூறப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய “ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் சந்தேகநபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளின்படி, இலங்கைக்குள் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை வெளிநாட்டிலிருந்து வழிநடத்திய முக்கிய நபர்களில் ஒருவராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் “கஞ்சிப்பான இம்ரான்” என்பவரின் பிரதான உதவியாளராகவும் இவர் செயற்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவருடன் தொடர்புடைய போதைப்பொருள் வலையமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயற்பட்டு வந்ததாகவும், அந்த வலையமைப்புடன் பெண்கள் உள்ளிட்ட மூவர் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.








