வன்னியின் தற்காப்புக் கலை ஆசானுக்கு சர்வதேச பெருமை – 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம் பெற்றார் யசோதரன் (பாபு) மாஸ்டர்
வன்னிப் பிரதேசத்தில் பல ஆண்டுகளாக கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை அர்ப்பணிப்புடன் கற்பித்து வரும் சூசைநாதர் யசோதரன் (பாபு) மாஸ்டர், தற்காப்புக் கலைத் துறையின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி (7th Dan Black Belt) பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் அவருக்கு இந்த உயரிய கௌரவம் வழங்கப்பட்டது. உலகத் தற்காப்புக் கலைத் துறையில் மதிப்புமிக்க ஆளுமையான கிராண்ட் மாஸ்டர் சோகி கிராடோ கன்ரோவின் கையால் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கான தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், சிவலீமன் சிலம்பம் கலைமன்றத்தின் தலைவராகவும், பாபு இசின்ரியூ கராத்தே பாடசாலையின் நிறுவனரும் தலைவராகவும் செயற்பட்டு வரும் யசோதரன் மாஸ்டர், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
தற்காப்புக் கலைகளின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிவரும் அர்ப்பணிப்பான சேவைகள், மாணவர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு, தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தெடுப்பதில் அவர் செலுத்திய பங்களிப்பு ஆகியவற்றை மதிப்பீடு செய்து இந்த 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வன்னி மண்ணின் பெருமையை சர்வதேச அரங்கில் உயர்த்தியுள்ள பாபு மாஸ்டரின் இந்தச் சாதனைக்கு சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.








