ஹொரணை, வகவத்த கொபவக்கவத்த பகுதியில் களு கங்கையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத மாணிக்கக்கல் மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கைகள் மீது வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சட்டவிரோத அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 14 படகுகள், மாணிக்கக்கல் அகழ்வு இயந்திரங்கள் மற்றும் பல்வேறு உபகரணங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட ஹொரணை மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ரோஹண ஓலுகலவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







