அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவராக எலான் மஸ்க்கின் கடைசி வேலை நாள் இன்று என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில், வெளிநாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம், பணியாளர்கள் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் மஸ்க் ஈடுபட்டு வந்தார்.
அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவராக 130 நாள்கள் மட்டுமே பொறுப்பு வகிக்க ஒப்புக் கொண்டிருந்த மஸ்க்கின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

இவர் தொடர்ந்து அப்பதவியை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறப்பு அரசு ஊழியராக எனது திட்டமிடப்பட்ட பணிக்காலம் நிறைவடைந்துவிட்டதாக நேற்றே (29) எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், எலான் மஸ்க் பதவி விலகல் குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப்,
“ஓவல் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) எலான் மஸ்க்குடன் இணைந்து செய்தியாளர்களை சந்திக்கவுள்ளேன்.
இன்றுதான் மஸ்க்கின் கடைசி நாள், ஆனால், அவர் அனைத்து விதங்களிலும் எங்களுக்கு உதவியாக எப்போதும் இருப்பார். எலான் அருமையானவர். வெள்ளை மாளிகையில் அனைவரையும் சந்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.