இலங்கை மத்திய வங்கியால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டம் ஒன்றை நடத்தி, 225 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் பணிப்பாளரை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (30) உத்தரவு பிறப்பித்தது.
சந்தேக நபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், சந்தேக நபர் ஃபூகோ ஒலின் பிரைவேட் லிமிடெட் (Fugo Olin Private Limited) என்ற நிறுவனம் ஒன்றை நடத்தி, பிரமிட் முதலீட்டுத் திட்டம் ஒன்றை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, 2023ஆம் ஆண்டு ஐந்து மாத காலப்பகுதியில், அந்த நிறுவனத்தின் 56 வங்கிக் கணக்குகள் மூலம் 220 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பணம் எந்த தரப்பினருக்கு சென்றது என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் பணிப்பாளரான எரங்க தில்ஷான் என்பவர் மீதான விசாரணைகள் இன்னும் முடிவடையாததால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரியது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.