நானுஓயா – சமர்செட், லேங்டல் தோட்டத்தில் நேற்று (30) அதிகாலை தொடர் லயன் குடியிருப்பில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் தற்காலிகமாக நானுஓயா கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேற்படி தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உலர் உணவு பொருட்களை நுவரெலியா பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் தோட்ட நிர்வாகத்தினர் இணைந்து வழங்கி வருகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவும் ஒவ்வொரு முறையும் நானுஓயா – சமர்செட், லேங்டல் தோட்டத்தில் வாழும் மக்கள் பாதித்து வருவதாகவும் மேலும் இந்த பகுதி மக்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இவ்மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாக்கியிருந்த போதிலும் தற்போது காணப்படும் மழை காலங்களில் மாத்திரம் தற்காலிக முகாம்களுக்கு செல்வதும், பின்பு காலநிலை வழமைக்கு திரும்பிய பின் வீடுகளுக்கு செல்வதுமாகவே வழமையாக கொண்டுள்ளனர். மண்சரிவினால் சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
எனவே இனி வரும் நாட்களில் சரி பாதிக்கப்பட்ட தங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பாதிக்கப்பட்ட இவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.