விடுதலைப் புலிகள் வைத்திருந்த தங்க நகைகளில் அரைவாசியை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கொள்ளையடித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயம் குறித்து அவர் பேசியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“விடுதலைப் புலிகள் நடத்திய வங்கிகளில் அப்பகுதி மக்களால் அடகு வைக்கப்பட்ட 220 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டிருந்தன.

அவை அனைத்தும் பல பொலித்தீன் பைகளில் வைக்கப்பட்டிருந்ததோடு அவற்றை அடகு வைத்தவர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதனையடுத்து, தங்க நகைகள் அனைத்தும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது.
அத்துடன், 110 கிலோ தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பசில் ராஜபக்சவும் கூறினார். இதன் பொருள், கிடைத்த தங்க நகைகளில் அரைவாசியை அவர் எடுத்துக்கொண்டார் என்பதாகும்.
நான் இராணுவத்திலிருந்து விலகிய பின்னரும் இது போன்று தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ராஜபக்ச குடும்பத்தினர் 6 டொன் தங்க நகைகளை ஜப்பான் நாட்டிற்கு விற்பனை செய்ததாகவும் ஒரு செய்தி எனக்கு கிடைத்தது” எனத் தெரிவித்துள்ளார்.