புலம்பெயர் நாடுகளில் வாழும் அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏற்றவாறான தெளிவானதும், நியாயமானதுமான செயன்முறையை உருவாக்குவதற்கும், அவர்கள் கௌரவத்துடன் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
அதேவேளை அண்மையில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அகதி கைதுசெய்யப்பட்ட சம்பவம் சட்டத்தின் பிரகாரமும், மனிதாபிமான அடிப்படையிலும் தீர்க்கப்படும் எனவும், இச் சம்பவத்தை குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிரிக்குமாறும் அவர் சகல தரப்பினரிடமும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து நாடு திரும்பிய 75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இச்சம்பவம் இந்தியாவிலுள்ள முகாம்களிலிருந்து மீள நாடு திரும்புவதற்காகத் தம்மைப் பதிவு செய்திருக்கும் சுமார் 10,000 இலங்கை அகதிகளை அச்சுறுத்தி, அவர்கள் நாடு திரும்புவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, ‘இலங்கைக்குத் திரும்பிய அகதி அந்தஸ்த்தைக்கொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டு, குடிவரவுச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நான் அறிவேன்.
எமது நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சூழ்நிலைகளால் அக்காலப்பகுதியில் பாரிய புலம்பெயர்வு இடம்பெற்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இவ்வாறான நபர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏற்றவாறான தெளிவானதும், நியாயமானதுமான செயன்முறையை உருவாக்குவதற்கும், உரிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை, அவர்கள் கௌரவத்துடன் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் அருண் ஹேமசந்திர அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தற்போது பதிவாகியுள்ள சம்பவம் சட்டத்தின் பிரகாரமும், மனிதாபிமான அடிப்படையிலும் வெகுவிரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் சகல தரப்பினரும் இவ்விவகாரத்தைப் பொறுப்புவாய்ந்த முறையில் அணுகவேண்டும் எனவும், இதனைக் குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர வேண்டுகோள்விடுத்துள்ளார்.