பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், முகமது யூனுஸ் தலைமையில், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் ‘தேசத்தந்தை’ என்ற பட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வங்கதேசத்தில் மாணவர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமரும், ஷேக் முஜிபுரின் மகளுமான ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
கடந்தாண்டு புதிய அரசு பொறுப்பேற்றவுடன் புதிதாக அச்சடிக்கப்படும் 20, 100, 500, 1000 தாள்களில் ஷேக் முஜிபுர் படத்துக்கு பதிலாக மதம் தொடர்புடைய கட்டமைப்புகள், பாரம்பரிய சின்னங்களை மாற்ற மத்திய வங்கிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வங்கதேச மத்திய வங்கி புதிய பணத் தாள்களை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் புதிதாக அச்சிடப்பட்ட பங்களாதேஷின் ரூபாய் நோட்டுகளில் இருந்து முஜிபுர் ரஹ்மானின் உருவப்படம் நீக்கப்பட்டதை அடுத்து, ‘தேசிய சுதந்திரப் போராட்ட கவுன்சில் சட்டத்தில்’ திருத்தம் செய்ய இடைக்கால அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதில் ஹிந்து மற்றும் புத்த கோயில்கள், வரலாற்று அரண்மனைகள், பிரிட்டிஷ் ஆட்சியில் வங்கதேச பஞ்சத்தை சித்தரிக்கும் ஓவியர் ஜைனுல் அபேதினின் ஓவியங்கள், பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவுச் சின்னம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
புதிய நோட்டுகள் படிப்படியாக நாடு முழுவதும் புழக்கத்துக்கு வரும் என்றும், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் இடம்பெற்றுள்ள பழைய நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் ஒரு சுதந்திர நாடாக உருவாக, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அழைப்பின் பேரில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. இதன் விளைவாக பங்களாதேஷ் தனி நாடாக உருவெடுத்தது.
விடுதலை காலத்தில் பங்களாதேஷ் அரசாங்கத்தில் பணியாற்றியவர்கள், ‘சுதந்திரப் போராளிகள்’ என அழைக்கப்பட்டவர்கள், தற்போது இடைக்கால அரசால் ‘விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள்’ என மறு பெயரிடப்பட்டுள்ளனர்.
அதே வேளையில், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் ‘தேசத்தந்தை’ பட்டம் நீக்கப்பட்டாலும், அவரது சுதந்திரப் போராட்ட வீரர் என்ற அந்தஸ்து தக்கவைக்கப்பட்டுள்ளது.