காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு (05) 10.10 மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று சம்பவித்திருக்கிறது.
இந்த விபத்தில் புதிய காத்தான்குடி – 06, இராசா ஆலிம் வீதி, அல் அமீன் வீதி, (தோணா சந்தி) என்னும் முகவரியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அப்துல்லாஹ் (21 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார.
உயிரிழந்த இளைஞன் பிரபல ஆடையகமான சிங்கப்பூர் டெக்ஸ் உரிமையாளரான பிரபல வர்த்தகரான காத்தான்குடியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அவர்களின் புதல்வர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே நேற்றிரவு 10.10 மணியளவில் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த வேனும் மோட்டார்சைக்கிளும் ஆரையம்பதி 5ம் கட்டை பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையை அண்மித்த பகுதியால் பயணிக்கும் போதே நேர் எதிர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கிய வேன் அக்கரைப்பற்றை சேர்ந்த பாடசாலை ஒன்றினது மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த வேன் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிளில் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் பயணம் செய்துள்ளதுடன் அவர்களில் 21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றையவர் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.