யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை முன்னெடுக்க யாழ். நீதவான் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.
செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், இன்று (06) கட்டளைக்காக வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பேராசிரியர் ஆகியோரின் நிபுணத்துவ அறிக்கை மற்றும் அபிப்பிராய அறிக்கை ஆகியவை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 அடி ஆழத்தில் மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒழுங்கு முறையின்றி குழப்பமான சூழலில் மனித என்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளது. ஆடைகளோ அல்லது தனிப்பட்ட அணிகலன்களோ குறித்த இடங்களில் காணப்படவில்லை போன்ற விடயங்கள் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அத்துடன் இதுவரையில் 18 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையுடன் (7) முதலாம் கட்ட அகழ்வு பணிகள் நிறைவடைவதனால் , தொடர்ந்தும் அப்பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க மன்று அனுமதிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
அதனை அடுத்து , மேலும் 45 நாட்களுக்கு அகழ்வு பணிகளை முன்னெடுக்க மன்று அனுமதித்துள்ளது.
அதேசமயம் அரியாலை செம்மணி சித்துப்பாத்தி புதைகுழியில் 3 கைக்குழந்தைகள் உட்பட 20 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
