யாழ்ப்பாணத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த முதியவர் கடந்த நான்காம் திகதி மதுபோதையில் மருத்துவமனையில் வழங்கப்பட்ட மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.

பின்னர் அவரது மனைவி அதிகாலை அவரை எழுப்பியுள்ள நிலையில் அவர் மயக்கம் அடைந்து காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.
தொடர்ந்து மயக்க நிலையிலேயே காணப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (08) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ள அதே நேரம் மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.