இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முகம்மது கியாஸ் (43), மனைவி பாத்திமா பர்ஹானா (34) இவர்களின் குழந்தைகள் முகம்மது யஹ்யா (12), அலிஷா (4), அமிரா (4) ஆகிய 5 பேர் இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் இன்று (ஜூன் 9) அதிகாலை சென்றடைந்தனர்.
இதுபற்றி தகவலறிந்த பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்த 5 பேரையும் மண்டபம் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில், முகம்மது கியாஸ் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இங்கு பலரிடம் கடன் பெற்று திருப்பி கொடுக்க முடியாததால் வாழ வழியின்றி தமிழகத்துக்கு குடும்பத்தோடு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு பின்னர், அவர்கள் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.