துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, ஈரானிடமிருந்து நேரடி கொலை மிரட்டல் அச்சுறுத்தல் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரகசியமாக விமானம் மாற்றிப் பயணித்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் துருக்கி தலைநகர் அங்காரா விமான நிலையத்தில், வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் இருந்து ட்ரம்ப் இரகசியமாக வெளியேற்றப்பட்டு, சிறிய இராணுவ விமானமான ‘ஏர் ஃபோர்ஸ் C-32A’ விமானத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தியாளர்களின் கவனத்திற்கு வராமல் இருப்பதற்காக, உணவு விநியோகிக்கும் லொறி ஒன்றை மறைப்பாகப் பயன்படுத்தி விமானம் மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் ட்ரம்ப் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இராணுவத்தினரும் ரகசிய சேவை அதிகாரிகளும் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப தான் செயல்பட்டதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அங்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்திருக்கலாம் என தெரிவித்தார். எனினும், அந்த அச்சுறுத்தல் தொடர்பாக தனக்கு விரிவான தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு தொடர்ச்சியாக பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில் தனது செல்வாக்கு காரணமாக இதுபோன்ற ஆபத்துகள் இயல்பானவை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இவ்வாறான அச்சுறுத்தல்கள் குறித்து தான் பெரிதாக கவலைப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.







