மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று (11) மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பழைய செயலகத்தில் நடைபெற்றது.
டெங்கு நோய் அதிகளவில் பரவும் 14 மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டமும் அடையாளம் காணப்பட்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அதிகாரிகள் கலந்துரையாடினர்.
வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், தேவையற்ற கழிவுகளை முறையாக அகற்றி, நீர் தேங்கக்கூடிய இடங்களை இல்லாதொழிக்க வேண்டும் என பொதுமக்களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.












