ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருக்கின்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றார்கள். நாங்கள் எங்களுடைய உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதரவாக வழங்குவோம். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(10) நடைபெற்றது.
மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட தமிழரசுக்கிளையின் தலைவருமான இரா.சாணக்கியன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 11 உள்ளுராட்மன்றங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றதுடன் கட்சியின் உறுதியுரையும் எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
நாங்கள் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி ஏதோவொரு வகையாக ஆட்சியதிகாரத்தை எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்ற நல்லதொரு செய்தியை இந்த இடத்தில் கூறிக்கொள்கின்றோம். இதிலே தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒன்பது பிரதேச சபைகளிலே நாங்கள் தவிசாளர் ஒருவரை, மேயர் ஒருவரை, உதவி தவிசாளர் ஒருவரை, பிரதி மேயர் ஒருவரை எங்கள் கட்சியின் சார்பில் முன்மொழிய இருக்கின்றோம்.

நாங்கள் போட்டியிட்ட அனைத்து சபைகளிலும் தவிசாளர் பதவி எங்கள் கட்சிக்குத்தான் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். நாங்கள் சிறுபான்மையாக இருக்கும் ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய இரண்டு சபைகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எங்களுடைய உறுப்பினர்கள் தான் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றார்கள்.
தேர்தலுக்கு முன்பாக நாங்கள் சொன்னதற்கு இணங்க மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். எங்களுடைய உறுப்பினர்கள் வெற்றியடைந்திருக்கின்றார்கள். நாங்கள் சில சபைகளிலே முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது.
குச்சவெளி, மூதூர் போன்ற சபைகளிலே 40வீதமான தமிழர்களும் 60வீதமான முஸ்லிம்களும் இருக்கின்ற மூதூர் சபையிலே தமிழர் ஒருவரை தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கின்றது.
யாழ் மாநகர சபையிலே நாங்கள் எங்களுக்கு கிடைத்த பட்டியல் ஆசனத்தை முஸ்லிம் உறுப்பினருக்கு வழங்கியதாக எங்களுடைய கட்சியை சேர்ந்தவர்களல்ல கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள் விமர்சித்திருக்கின்றனர். அதே நேரம் 60வீதமான முஸ்லிம்கள் வாழும் மூதூர் சபையிலே தமிழர் ஒருவரை தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கின்றது.
எங்களுடைய அரசியல் குழுக் கூட்டத்திலே நாங்கள் எடுத்த தீர்மானம் தமிழ் பேசும் கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நாங்கள் எங்களுடைய தவிசாளர் பதவிகளை எடுப்பதற்கான வேலைகளை பார்க்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்திருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியைத்தவிர ஆசனங்களைப் பெற்ற ஏனைய கட்சிகளாக தேசிய மக்கள் சக்தி, கிழக்குத் தமிழர் கூட்டணி அல்லது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, சங்கு சின்னத்தில் போட்டியிட்ட கட்சி, சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு 2ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் உள்ளன.
இதிலே இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து சபைகளிலும் தவிசாளராகவும் மேயராகவும் பிரதி தவிசாளராகவும் பிரதி மேயராகவும் நாங்கள் வேட்பாளர்களை முன்னிறுத்தும்பொழுது இதிலே தெரிவு செய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்கள் எவராக இருந்தாலும் எங்களுடைய கட்சிக்கு விரும்பினால் ஆதரவளிக்கலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே நாங்கள் எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து சபைகளில் ஆட்சியதிகாரத்தை எடுப்பதற்கு செல்லவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருக்கின்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றார்கள்.
நாங்கள் எங்களுடைய உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதரவாக வழங்குவோம். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும்.
நேற்றுக்கூட மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற ஈ.பி.டி.பி உறுப்பினர்களை சாணக்கியனுடைய அலுவலகத்திற்கு அழைத்திருக்கின்றார்கள் என்று பொய்யான செய்திகளை பரப்பியிருந்தனர். இப்படியான பொய்யான செய்திகளை பரப்பி எங்களுடைய மாவட்டத்தில் எங்களுடைய கட்சிக்குள்ளே பல குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். இது முற்றாக பொய்யான செய்தியாகும். என்றார்.