ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தல், கொலை மற்றும் காணாமல்போனது தொடர்பான முக்கிய சாட்சியை மிரட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று முன்தினம் (11) உத்தரவிட்டார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட 2010 ம் ஆண்டு ஜனவரி 24, அன்று காணாமல் போனார். அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சட்ட மா அதிபர் கொழும்பு மேல்நீதிமன்றில் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன உட்பட பத்து பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். தற்போது விசாரணை நடந்து வருகின்றது. இதில் குற்றம் சாட்டப்பட்ட பெரும்பாலானவர்கள் சம்பவம் நடந்த நேரத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி வந்தனர்.

வழக்கின் முக்கிய சாட்சியான சுரேஷ் குமாரை, ஓய்வுபெற்ற பிரிகேடியர் குமாரரத்ன பலமுறை மிரட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபையின் தலைவர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து ஓய்வுபெற்ற பிரிகேடியரின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பலமுறை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகத் தெரியவந்ததுடன், கூடுதலாக ஜூன் 06ஆம் திகதி முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரால் அதே தொலைபேசி எண்ணிலிருந்து செய்யப்பட்ட மற்றொரு மிரட்டலின் விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன
இவற்றை கருத்தில்கொண்டு ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்னவை 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டதுடன், தற்போது நடந்து வரும் விசாரணைக்காக 13ஆம் திகதி மேல்நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்துமாறு கட்டளையிட்டார்.