ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சின் நிர்வாக தர அதிகாரி ஒருவரிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
குறித்த அதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்ட பின்னர், குறித்த நபரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய நாடு முழுவதும் உள்ள 28 சிறைச்சாலைகளுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கைதியின் விடுதலை தொடர்பாக அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் சிறைச்சாலை ஆணையர் நாயகம் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.