மாணவர்கள் அரச நிர்வாகம் மற்றும் கொள்கைத் தயாரிப்பில் பங்கேற்கும் முன், அனுபவமும் பயிற்சியும் பெறுவதற்கு “மாணவர் பாராளுமன்றம்” உறுதுணையாக இருக்கும் என நுகேகொட மஹாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற மண்டபத்தில், நுகேகொட மஹாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்த ஹேமாலி வீரசேகர,

பெண்கள் மீது சமூகத்தில் நிலவும் பார்வை, பயிற்சி மற்றும் அனுபவத்தின் குறைபாடு, குடும்பச் சுமை ஆகியவை கிராமப்புறங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளன. இருந்தும், இந்நாட்டின் சட்டவாக்கத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருக்கிறது. உலக அரசியலில் இது பின்தங்கிய நிலையாக இருந்தாலும் அதற்கு சவாலாக அமையும் வகையில் பெண்களின் சட்டமன்ற பிரதிநிதித்துவம் அதிகரித்து வருகிறது என்றார்.
பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம். ஜயலத் பெரேரா, மாணவர்கள் எதிர்காலத் தலைவர்களாக உருவாக ஆளுமைப் பண்புகள் வளர்க்கும் திட்டங்களில் மாணவர் பாராளுமன்றம் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார். மேலும், பாராளுமன்ற உதவிப் பணிப்பாளர் கே. ஆர். ஹேரத் பாராளுமன்றத்தின் பாரம்பரியம் மற்றும் செயல்முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வையடுத்து சபாநாயகர் மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் பாடசாலையில் செயல்படுத்த விரும்பும் திட்டங்கள் உள்ளிட்ட முன்மொழிவுகளை முன்வைத்தனர்.
மேலும் பங்கேற்ற மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு, ஜனாதிபதி செயலகமும், இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து, பாடசாலை மாணவர்களுக்கு அரசியல் மற்றும் நிர்வாக அனுபவத்தை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, நுகேகொட மஹாமாயா மகளிர் கல்லூரியின் அதிபர் டி.ஏ.டி.வனகுரு, குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள், பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
