மட்டக்களப்பில் 12 சபைகளையும் தோற்ற நீங்கள் மிச்சம் இருக்கின்றவற்றையும் தோற்பீர்கள் என அருண் ஹேமச்சந்திராவை பார்த்து சாணக்கியன் கூறிய சம்பவம் நேற்று (17) சபையில் இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய சபை அமர்வின் போது, மட்டக்களப்பில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது தொடர்பிலும், பண கஷ்டங்களுக்கு மத்தியில் அவர்களால் தேசிய மட்டங்களுக்கு போக முடியாத சூழல் காணப்படுவதாகவும், இது தொடர்பில் தாம் முன்னாள் அபிவிருத்தி குழு தலைவரிடம் பேசியுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.

இந்தநிலையில் திடீரென இடையில் பேசுவதற்கு அனுமதி கேட்ட வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, “நாமல் ராஜபக்சவுடன் நீலப் படையணியுடன் இணைந்து செயல்பட்ட நீங்கள் அவர்களின் பல்வேறு ஊழல் மோசடிகளுக்கு துணை போனீர்கள். நீங்கள் எங்களை பற்றி குறை கூற முடியாது” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சாணக்கியன், இது போன்ற தான்தோன்றித்தனமான பேச்சுக்களால் தான் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளீர்கள், வெட்கம் என்பதொன்று இருந்தால் களுவாஞ்சிகுடி பிரதேச சபையில் ஆட்சியமைக்க பிள்ளையானுடன் பேசுவீர்களா?
அத்தோடு நான் எந்தவொரு முறைகேடுகள் தொடர்பிலும் உங்களை பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம் தொடர்பிலேயே கருத்துக்களை முன்வைத்தேன்.

முதலில் இவ்வாறு தான்தோன்றித்தனமாக பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். தான்தோன்றித்தனத்தால் தான் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளீர்கள். நாங்கள் கொள்கையுடன் செயற்படுகிறோம். களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு உங்களின் கட்சி பிள்ளையானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. உண்மையில் உங்களுக்கு வெட்கம் என்பதொன்று இல்லையா.
மட்டக்களப்பில் 12 சபைகளையும் தோற்ற நீங்கள் மிச்சம் இருக்கின்றவற்றையும் தோற்பீர்கள் என மேலும் தெரிவித்தார்.