ஈரானின் மூன்று அணு ஆயுத கட்டமைப்புகளை அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாகத் தாக்கி அழிக்கவில்லை என உளவுத்துறை தகவல்கள் வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் உள்ள 3 அணுசக்தி தளங்களை பங்கர் பஸ்டர் குண்டுகள் மூலம் அழித்ததாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் இந்தத் தாக்குதலால் ஈரானுக்கு சில பின்னடைவை மட்டுமே கொடுக்க முடியும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் அழிக்கவில்லை என்றகூற்றுக்கு டொனால்ட் ட்ரம்பும் வெள்ளை மாளிகையும் கடுமையாக எதிர்த்துள்ளன.

இந்தக் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “அந்த அறிக்கை போலியானது. வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களில் ஒன்றை இழிவுபடுத்தும் முயற்சி இது. ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன!” எனப் பதிவிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், “அறிக்கை முற்றிலும் தவறான ஒன்று. ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க மேற்கொண்ட துணிச்சலான போர் விமானிகளை இழிவுபடுத்தும் முயற்சியாகும்.
14 குண்டுகள் ( தலா 13,000 கிலோ எடையுடன் உள்ள குண்டுகள்) இலக்குகளை நோக்கித் தாக்கும் போது என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார்.
இருப்பினும், ட்ரம்ப் தரப்பில் இதுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ட்ரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ‘தேசத்துரோகம்’ என்று கூறியுள்ளார்.








