கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துணவு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தும் விழிப்புணர்வு திட்டம் ஒன்றை சுகாதாரமற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்தவினால் மாவட்ட மட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலில் இந்த விசேட திட்டம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களின் மேற்பார்வையில் நடாத்தப்பட்டுவருகின்றது.
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் போஸாக்கற்ற கர்ப்பிணி தாய்மாருக்கு போஷாக்கு உணவுகளை பற்றி விழிப்புணர்வூட்டும் விசேட திட்டமொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கமைய கர்ப்பிணித்தாய்மாருக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டங்களும், கண்காட்சிகளும் விழிப்புணர்வு ஊர்வலங்களும், செயலர்வுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கமைய ஆரயம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று (26) கர்ப்பிணி தாய்மாருக்கான போசாக் உணவுகளை விழிப்புணர்வூட்டும் கண்காட்சி யொன்று நடைபெற்றது.

ஆரயம்பதி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி தேவசிங்கம் திலக்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி தெட்சன கௌரி தினேஷ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த கண்காட்சியினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய தாய் சேய் நலன் வைத்திய அதிகாரி கே.கிருசுதன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த சத்துணவு கண்காட்சியில் கர்ப்பிணி தாய்மார்கள் உட்கொள்ள வேண்டிய சத்துணவுகள் சிறுபிள்ளைகளைக் கொண்டுள்ள தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு வகைகள் சத்துணவு வகைகள், கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துணவு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.














