கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் போதைக் கலாச்சாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற மக்கள் ஆணையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளை திருத்தி புனரமைப்பதற்கான நிதி உதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் ஞா. சுகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
















2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 71 பயனாளிகளுக்கு மொத்தம் சுமார் 7.16 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி உதவிகள் வழங்கப்பட்டன.
இதன்படி, 30 பயனாளிகளுக்கு தலா 150,000 ரூபாயும், 17 பயனாளிகளுக்கு தலா 100,000 ரூபாயும், 24 பயனாளிகளுக்கு தலா 40,000 ரூபாயும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, வீடமைப்பு, விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு அரசாங்கம் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கலாச்சாரத்துக்கு எதிராக சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனை எதிர்ப்பவர்கள் மக்களை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.








