கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் நீண்டகாலமாக காணி அனுமதிப்பத்திரம் இன்றி வசித்து வந்த 43 பயனாளிகளுக்கு காணி உரிமங்கள் மற்றும் திக்வா புயலால் பாதிக்கப்பட்ட 100 வர்த்தகர்களுக்கு நிவாரணக் காசோலைகள் இன்று (29) வழங்கப்பட்டன.
கிண்ணியா பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆவணங்களையும் நிவாரணங்களையும் கையளித்தார்.
திக்வா புயலால் வணிக நடவடிக்கைகளில் பாதிப்பை சந்தித்த 100 வர்த்தகர்களுக்காக மொத்தம் ரூ.80 இலட்சம் பெறுமதியான நஷ்டஈட்டு காசோலைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் எம். ஈ. எம். ராபிக், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் பிரதேச இணைப்பாளர் அஷ்ரப் இம்ரான், கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். நியாஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.








