மட்டக்களப்பு புதுரைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மட்டு தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல் போனவர் கணேஸ்விக்கினேஸ்வரன் என்பவராகும். இவர் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தவர். கடந்த ஜூலை 19ஆம் திகதி வழக்கம்போல வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அன்று முதல் வீடு திரும்பவில்லை.
அவரை உறவினர்கள் மொபைல் ஊடாக தொடர்பு கொண்ட போது, “மாமாங்கக் கோவிலில் நடைபெரும் உற்சவத்தை முன்னிட்டு, அங்கு அவரது முதலாளி அமைத்த உணவகத்தில் பணியில் ஈடுபட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர், ஜூலை 26ஆம் திகதி, “சம்பளத்தை பெற்றவுடன் வீடு திரும்புவேன்” என்று கூறிய நிலையில், அதன்பின்னர் அவருடைய மொபைல் தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும், அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை மேற்கொண்ட தேடல் முயற்சிகளிலும் அவர் குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அவரது இருப்பிடத்தைக் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், பொதுமக்கள் உடனடியாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அல்லது அருகிலுள்ள எந்தவொரு பொலிஸ் நிலையத்துக்கும் தகவல் வழங்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








