பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக இரட்டை டக்ஸிகள் இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கான இறுதி முடிவு எப்போது எடுக்கப்படும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
முந்தைய அரசாங்கங்களின் போது எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட சுங்கவரி விலக்கு அனுமதிகள் நிறுத்தப்பட்ட நிலையில், புதிய நிர்வாகம் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு வாகனம் ஒதுக்க தீர்மானித்துள்ளது. இருப்பினும் இதுவரை எம்.பி.க்களுக்கு வாகனங்கள் வழங்கப்படவில்லை.
மேலும், புதிய அரசாங்கம் எம்.பி.க்களுக்கான பல சலுகைகளை குறைத்துள்ளது. பாராளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவுக்காக எம்.பி.க்கள் இப்போது ரூ.2000 செலுத்த வேண்டும். அதோடு, காப்பீட்டுத் தொகை குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் தலைவர்களுக்கான ஓய்வூதிய சலுகைகளையும் ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட வாகன இறக்குமதி தடையை இலங்கை அரசு 2025 பிப்ரவரி 1 முதல் படிப்படியாக தளர்த்தியுள்ளது. தற்போது பேருந்துகள், லொரிகள் மற்றும் பயன்பாட்டு வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற வாகனங்களின் மீதான தடையும் எதிர்காலத்தில் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








