மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம், காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் போராட்டங்களில் இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று (29) மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்த அவர்,
நாளை ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான உறவினர்கள் பங்கேற்க உள்ளனர்.

கருணாகரம் குறிப்பிட்டதாவது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று வரை ஆயிரக்கணக்கில் இருப்பினும், உண்மை நிலை வெளிப்படுத்தப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரத்தை மறைக்க முடியாது, எனவே அரசாங்கம் அவர்களின் நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, “எங்களுடைய உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள், எமது இனத்தை அழித்தவர்கள் இன்று அந்த விசாரணைகளை நடத்த அருகதையற்றவர்கள். அதனால், சர்வதேச சமுதாயமே உண்மையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதற்கிடையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முன்னெடுப்பில் வடக்கு–கிழக்கில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேகரிக்கப்படும் கையெழுத்துகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்படவுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.








