”ரஷ்யாவும், சீனாவும் பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் ஒன்றுபட்டுள்ளன” என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறியதாவது,
பிரிக்ஸ் அமைப்பு உலகளாவிய அளவில் முக்கிய அங்கம் வகிக்கிறது. உலகளாவிய நிதி நிறுவனங்களில் சீர்திருத்தங்களை ஆதரிப்பதிலும் பிரிக்ஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

சீனாவுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். ரஷ்யாவும், சீனாவும் பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் ஒன்றுபட்டுள்ளன.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், சர்வதேச பாதுகாப்பு குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் பாரபட்சமான தடைகளுக்கு எதிராக பொதுவான நிலைப்பாட்டை எடுக்கவும், பிரிக்ஸ் நாடுகளின் திறனை வலுப்படுத்துவதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.
சீனாவுடன் இணைந்து சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சீர்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.
அனைத்து மனித குலத்தின் நலனுக்காகவும், முன்னேற்றத்தை நாங்கள் நாடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்
இதேவேளை சீனாவின் தியான்ஜின் நகரில் நடக்கும் 25ஆவது ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








