வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த அனுமதிப்பத்திர திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2.4 பில்லியன் ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த முறைகேடுகள் முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், 640 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சிறப்புரிமைகள் இரண்டு நிறுவனங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டதாக, பிரதம கணக்காய்வாளர் அறிக்கைகளை மேற்கோள் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேலும், திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான தகவல்கள் கணக்காய்வாளருக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வெளிநாடு செல்லாத நபர்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை, தொழில் விவரங்கள் குறிப்பிடப்படாத விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டமை, சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை மற்றும் குறுகிய காலம் வெளிநாட்டில் தங்கியிருந்தவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டமை போன்ற பல்வேறு குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சொகுசு வாகனங்களுக்கான வரி வரம்பு 6 மில்லியன் ரூபாவிலிருந்து 12 மில்லியன் ரூபாவாக உயர்த்தப்பட்டதன் காரணமாக அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ருவன்திலக ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் வரி செலுத்தும் மக்களின் நிதிக்கு ஏற்பட்ட பாதிப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோர் இரண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
CAB 7373 மற்றும் CAB 7171 என்ற இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்கள் இந்த முறையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இதில் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பதில்கள் அல்லது சட்டரீதியான முடிவுகள் வெளியாகும் வரை, அவை குற்றச்சாட்டுகள் என்ற நிலையிலேயே கருதப்பட வேண்டும்.







