வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளின் முன்னறிவிப்புகளை மீறி போதைப்பொருள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கொண்ட இரண்டு கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டனவா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கொள்கலன்கள் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனவா, யார் அவற்றை நடத்தியது, இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட 323 சிவப்பு லேபள் கொண்ட கொள்கலன்களில் அவை உள்ளனவா என்றும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மித்தெனிய மற்றும் கந்தானவில் ‘ஐஸ்’ என்ற போதைப்பொருள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன கலவைகள் சமீபத்தில் பொலிஸார் மீட்டதை வரவேற்ற சஜித் பிரேமதாச இது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.








