நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்பும் பெயரில், தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில், தற்போது கல்வித் துறையில் 40,000-க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ள நிலையில், 23,000 ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், ஆரம்பத்தில் அரச பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்த கல்வி அமைச்சின் நிலைப்பாடு தற்போது மாறியுள்ளதாகவும், அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் சேவையில் இணைய வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.








