மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ் நியமிக்கப்படும் வகையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றும் ஜே.ஜே. முரளிதரன், வரும் 26ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக கடமையாற்றி வரும் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரி அருள்ராஜ், இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

2003ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்த அருள்ராஜ், கிண்ணியா மற்றும் சேருவல பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், வடகிழக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளிலும் பணியாற்றியுள்ளார்.
அதேபோல், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் உள்ளிட்ட பொறுப்புக்களையும் வகித்துள்ளார்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராகவும் பின்னர் திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராகவும் பணியாற்றிய அவர், சமீபகாலமாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில், தற்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.








