இலங்கையில் பால்நிலைசார் – நீதிக்கான குடும்பச் சட்டம் தொடர்பான தேசிய பெண்ணிய கருத்தாடல், கடந்த செப்டெம்பர் 20 ஆம் தேதி கொழும்பில் நடைபெற்றது.
சூரியா மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தலைமையில், பல பெண்கள் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், நாடு முழுவதும் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முழுநாள் நடைபெற்ற கருத்தாடலில், மீண்டு வாழும் பெண்கள், பெண் வழக்குரைஞர்கள், சட்ட முன்னெடுப்பாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தங்கள் அனுபவங்களையும் சவால்களையும் பகிர்ந்து கொண்டனர். திருமணம், விவாகரத்து, சொத்துரிமைகள், பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு, குடும்ப வன்முறைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரச்சினைகள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றன.








கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதியும் சட்டத்திற்கான வாழ்நாள் பேராசிரியருமான பேராசிரியர் ஷர்யா ஸ்கார்னிவெல், வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள குடும்பச் சட்ட சீர்திருத்தங்களை எடுத்துரைத்து, இலங்கைக்கு பொருந்தக்கூடிய மாதிரிகளை சுட்டிக்காட்டினார்.
நிகழ்வின் இறுதியில், பங்கேற்பாளர்கள் கூட்டாக உருவாக்கிய “இலங்கையின் குடும்பச் சட்டங்கள் மற்றும் சட்ட நடைமுறை தொடர்பான பெண்கள் பிரகடனம்” அதிகாரப்பூர்வமாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மகளிர் ஆணைக்குழு பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.
இந்தப் பிரகடனத்தில் பின்வரும் முக்கிய பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
பிரகடனத்தின் முக்கிய பரிந்துரைகளாவன,
- தனித்துவமான குடும்ப நீதிமன்றங்கள்
- குடும்பச் சட்ட ஆணைக்குழு நிறுவுதல்
- குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக நிர்ணயித்தல்
- பரஸ்பர ஒப்புதல் விவாகரத்து
- திருமணத்திற்குள் பாலியல் வன்கொடுமையை குற்றமாக்கல்
- குடும்ப வன்முறையை ஒப்புக் கொள்ளாத நிலைப்பாடு ஆகியவை அடங்குகின்றன.
இப்பிரகடனத்தில் கையொப்பமிட விரும்பும் நபர்கள் https://taplink.cc/slfamilylaw
என்ற இணையதளத்தின் மூலம் தங்கள் ஒப்புதலை வழங்கலாம் என ஏற்பாட்டுக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.








