மட்டக்களப்பு – “சுபிட்சத்தை நோக்கி” என்ற கருப்பொருளின் கீழ், நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பயன்படுத்தப்படாததும் ஆகிய பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மட்டக்களப்பில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் வைபவ ரீதியில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், அரசாங்க அதிபர் நேரில் பங்கேற்று உணவுப் பொருட்கள் எவ்வாறு பதப்படுத்தப்படுகின்றன, பொதி செய்யப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார்.
நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், உதவி பிரதி செயலாளர் திருமதி டிலக்ஷினி சசிதரன், மட்டக்களப்பு காணி ஆணையாளர் என். விமல்ராஜ், கைத்தொழில் அதிகார சபை உத்தியோகத்தர் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், வல்சி நிறுவன நிர்வாகி ரி. தயாபரன், ரிச்சா நிறுவனர் க. பாஸ்கரன், வல்சி நிறுவனம் இணைப்பாளர் த. சுரேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
முதன்முறையாக ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் சுமார் 15 வகைகள் அடங்குகின்றன. அதில், மரவள்ளி கிழங்கு, தேங்காய்ப்பால், தேங்கா பூ, வெண்டைக்காய், பயிறு, காளான், நிலக்கடலை, சின்ன வெங்காயம், வற்றவப் பழ ஜூஸ், ஐஸ்கிரீம், முருங்கை இலை, மரவள்ளி இலை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த முயற்சி, மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய மற்றும் தொழில் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
















