போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (11) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சில தரப்பினரால் யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி தீர்மானமோ அல்லது இணக்கப்பாடோ எட்டப்படவில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களின் தீவிரத்தன்மை குறித்து கலந்துரையாடும் போது பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் யோசனைகளில் ஒன்றாகவே மரண தண்டனை தொடர்பான கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய முறையில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








