பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று (24) நடைபெற்ற கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு ஆலோசனைக் கூட்டத்தில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை முக்கிய கோரிக்கைகள் முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
18,000 சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடந்த 30 ஆண்டுகளாக வறுமையை ஒழிப்பதில் பங்காற்றியும், இதுவரை அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
நீண்டகாலமாக நிலவும் வெற்றிடங்களை நிரப்ப அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் சமூர்த்தி கடிதங்கள் தற்போது சிங்களத்தில் மட்டுமே அனுப்பப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, தமிழ் மொழியில் அனுப்பும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னலகே,
சமூர்த்தி அதிகாரிகளுக்கான பதவி உயர்வு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்,
வெற்றிடங்கள் நிரப்ப அனுமதி கோரப்பட்டுள்ளது,
தமிழ் மொழி தேசிய மொழியாக இருப்பதால் இனி கடிதங்கள் தமிழ் மொழியிலும் அனுப்பப்படுவதை உறுதி செய்ய பணிப்புரை வழங்கியுள்ளார் என்று கூறினார்.
சமூர்த்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர், தற்போது தமிழ் மொழிபெயர்ப்பாளர் இல்லாததால் கடிதங்கள் சிங்களத்தில் மட்டுமே அனுப்பப்பட்டதாக விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, ஒப்பந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பாளர்களை நியமித்து இனிமேல் தமிழ் மொழி பிரதேசங்களுக்கு தமிழிலும் கடிதங்கள் அனுப்பப்படும் என அமைச்சரால் உத்தரவு வழங்கப்பட்டது.








