மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள கோட்டைக்கல்லாறு கிராமம், இலங்கையில் வேறு எங்கும் காண முடியாத ஒரு தனித்துவமான மரணவீட்டு நடைமுறையை பல தலைமுறைகளாக பேணிவருகிறது.
கிராமத்தில் யாராவது ஒருவர் மரணம் அடைந்தால், அந்த வீட்டுக்கான அனைத்து செலவுகளையும் கிராம மக்கள் சேர்ந்து பூர்த்தி செய்வது இந்நடைமுறையின் சிறப்பாகும். இதனால் திடீர் மரணம் ஏற்பட்டாலும், குடும்பத்தினர் பணம் பற்றிய அழுத்தம் அல்லது கவலை இன்றி இறுதிக்கிரியை நடைபெறுகிறது.
கிராமத்தில் சமீபத்தில் 75 வயதான சுப்பிரமணியம் சபாரெத்தினம் காலமானபோது, இந்த நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்பட்டது. ஆலயம் சார்ந்த குடித்தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து மரணவீட்டுக்குரிய தேவைகளை ஏற்பாடு செய்ததோடு, நிதியுதவியும் வழங்கினர். அன்றைய தினம் மட்டும் சுமார் மூன்று இலட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு கிடைத்ததாகவும், பின்னர் வந்தவர்களின் பங்களிப்பால் அந்தத் தொகை ஐந்து இலட்சத்தைத் தாண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கோட்டைக்கல்லாற்றின் குடித்தலைவர் தம்பியப்பா ஜெயந்திரராஜா கூறுகையில், “மரணம் நிகழ்ந்தவுடன் ஆலய வண்ணக்கர் மற்றும் குடித்தலைவர்கள் மரணவீட்டில் சென்று, மக்கள் பங்களிப்புகளைச் சேகரித்து அன்றே அந்தக் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கிறோம். இந்த நடைமுறை பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது என்பது எங்களின் பெருமை” என்றார்.

அதேவேளை, மறைந்தவரின் மருமகனான வங்கி முகாமையாளர் நீதிராஜா சண்முகப்பிரியன், “இங்கு ஏழை, பணக்காரன் என்ற பேதம் இல்லை. மரணம் நிகழ்ந்தவுடன் தேவையான பொருட்கள் கடனாக வாங்கப்படுகின்றன. பின்னர் மக்கள் வழங்கும் பங்களிப்புகள் மூலம் அனைத்துச் செலவுகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன. இது கோட்டைக்கல்லாற்றின் தனிச்சிறப்பு” எனத் தெரிவித்தார்.
மரணவீட்டில் சோடா, பாக்கு போன்றவை வழங்கப்படுவதில்லை என்பது மேலும் குறிப்பிடத்தக்கது. தேவையானால் பால்தேனீர் மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்தக் கிராமத்தின் பாரம்பரிய நடைமுறை, பிற கிராமங்களும் பின்பற்றத்தக்க சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது.








