திருட்டுப்போன பசுமாடுகளில் ஒன்று இறைச்சிக்கு வெட்டி நிலையில் காத்தான்குடியில் தலை மீட்பு இருவர் கைது இரு மாடுகள் மீட்பு
மட்டக்களப்பில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த 3 பசு மாடுகளைத் திருடிச் சென்று அதில் 5 இலச்சம் ரூபா பெறுமதியான ஒரு பசு மாட்டை வெட்டி இறைச்சியாக்கிய சம்பவம் தொடர்பாக காத்தான்குடியைச் சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் மற்றும் பசுவை திருடிச் சென்று விற்பனை செய்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட இருவரை நேற்று புதன்கிழமை (01) இரவு கைது செய்ததுடன், இரு மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதாகவும் அதேசமயம் இதே போன்று கடந்த மாதத்தில் 25 மாடுகள் காணாமல் போயுள்ளதாகவும் கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது.,
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள உறுகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது வாழ்வாதாரத்துக்காக உறுகாமத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் 3 பசுமாடுகளை கட்டி வளர்த்து வருகின்றார். இதில் இறைச்சிக்காக வெட்டிய கன்று குட்டி ஒன்றின் தாயான பசுமாட்டில் இருந்து தினமும் காலையில் 15 லீற்றர், மாலையில் 15 லீற்றர் பாலை கறந்து விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த (28) ஞாயிற்றுக்கிழமை இரவு தோட்டத்தில் அமைந்துள்ள குடிசையில் நித்திரை செய்துவிட்டு அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்த போது கட்டியிருந்த 3 மாடுகளும் திருட்டுப் போய் உள்ளதை கண்டு கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து காத்தான்குடியில் உள்ள மாடு வெட்டும் மடுவத்தில் திருடிச் சென்ற பசு மாட்டை இறைச்சிக்காக வெட்டிய வருவதாக மாட்டின் உரிமையாளருக்கு தகவல் ஒன்று கிடைத்ததை அடுத்து சம்பவ தினமான நேற்று புதன்கிழமை (01) இரவு மாட்டின் உரிமையாளர் காத்தான்குடி பொலிசாருடன் மாடு வெட்டும் மட்டத்தை சுற்றிவளைத்த போது அங்கு திருடு போன பசு மாடு, இறைச்சிக்காக பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியுடன் வெட்டி இறைச்சியாக்கப்பட்டிருப்பத்தை கண்டுபிடித்ததுடன், வெட்டிய பசு மாட்டின் தலையை மீட்டதோடு இரு மாடுகளையும் உயிருடன் மீட்டனர்.
இதனை தொடர்ந்து இறைச்சி கடை முதலாளியை கைது செய்து, விசாரணையில் அவர் அந்த பகுதி இளைஞர் ஒருவர் தனது மாடுகள் என தனக்கு பணத்திற்கு விற்பனை செய்ததாகவும் அவரிடம் இருந்து அதற்கான கடிதத்தை எழுத்து மூலம் பெற்று அதற்கான பணத்தை வழங்கியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதையடுத்து திருடிய மாடுகளை விற்பனை செய்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் திருடிய மாடுகள் மற்றும் வெட்டப்பட்ட மாட்டின் தலை உட்பட்ட சான்று பொருட்களுடன் அவர்களை கரடியனாறு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை கரடியனாறு பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் மட்டும் 25 மாடுகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.








