அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேசத்தில் உள்ள நாவலடி வட்டைக் காணிகளில், முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் வெளிநபர்கள் விவசாயம் செய்வது பெரும் அநீதி என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், 21 முஸ்லிம் விவசாயிகளுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரால் உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தும், கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த முஸ்லிம் விவசாயிகள் இப்போது தங்கள் சொந்த நிலங்களில் இருந்து விலக்கப்படுவதாகவும், வெளிநபர்கள் அங்கு விவசாயம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இந்த காணிகள் முஸ்லிம் விவசாயிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளதாக அவர் நினைவூட்டினார். “இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிட்டால் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்புவேன்,” என உதுமாலெப்பை எச்சரித்தார்.
இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, முஸ்லிம்களுக்கு உத்தரவுப்பத்திரம் வழங்கப்பட்ட நிலங்களில் ஏன் வெளிநபர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என பிரதேச செயலாளரிடம் கேள்வி எழுப்பினார். இறுதியில், நாவலடி வட்டைக் காணிப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து விசேட கூட்டம் ஒன்றை நடத்தி தீர்வு காண தீர்மானிக்கப்பட்டது.








