வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (12) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆலயத் தீர்த்தக் கேணியில் நண்பகல் 12 மணியளவில் நடைபெற்ற தீர்த்தோற்சவத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
கடந்த 03ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தின் 10ஆம் நாளான இன்று, ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

விசேட அபிஷேகங்கள் மற்றும் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜை நடைபெற்றது. பின்னர் மாமாங்கேஸ்வரர் சுவாமி வெளிவீதி உலா வந்ததுடன், வேத பாராயணங்கள் முழங்க பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்களுக்கு மத்தியில் தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
இதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவழிபாடுகளில் ஈடுபட்டனர்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றதும், ஸ்ரீ இராமபிரானால் வழிபடப்பட்டதாக வரலாற்றுத் தொன்மை கொண்டதுமான இப்புண்ணிய தலத்தில், ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்கள் பிதுர்க்கடன் செலுத்தி ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்வது சிறப்பம்சமாகும்.
இந்தத் தீர்த்தோற்சவத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்துகொண்டு மாமாங்கேஸ்வரரின் அருளைப் பெற்றுச் சென்றனர்.


























