உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விண்டோஸ் 10 (Windows 10) பயனர்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 10ற்கான அதிகாரப்பூர்வ இலவச ஆதரவு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் திகதி நிறைவடையும் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தேதிக்குப் பிறகு, விண்டோஸ் 10 இயங்கும் கணினிகளுக்கு பாதுகாப்புப் புதுப்பிப்புகள் (Security Patches), தொழில்நுட்ப திருத்தங்கள் (Bug Fixes) அல்லது புதிய அம்சங்கள் (Features) எதுவும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் எச்சரித்ததாவது, ஆதரவு நிறைவடைந்த பிறகும் விண்டோஸ் 10 இயங்கலாம். ஆனால் பாதுகாப்புப் புதுப்பிப்புகள் இல்லாததால், அவை இணையத் தாக்குதல்களுக்கு (Cyber Attacks) மற்றும் தகவல் திருட்டுகளுக்கு மிக எளிதில் இலக்காகக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பயனர்களை விண்டோஸ் 11க்கு மேம்படுத்துமாறு (Upgrade) வலியுறுத்தியுள்ளது. எனினும், எல்லா கணினிகளும் விண்டோஸ் 11 இயங்குதளத்துக்கு பொருத்தமாக இருக்காது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் அத்தகைய கணினி பயனர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்புடன் இயங்குவதற்காக, லினக்ஸ் (Linux) அல்லது குரோம் ஓஎஸ் (Chrome OS) போன்ற மாற்று இயங்குதளங்களுக்கு மாறுவது சிறந்த தீர்வாக தொழில்நுட்ப வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.








