– சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார்-
இலங்கையின் அரசியல் வரலாற்றில் பணம் பெற்று சோரம் போன முதலாவது அரசியல் கட்சி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (மு.கா) என்று வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன.
1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடாத்தப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது இந்த நிகழ்வு இடம்பெற்றது.
அந்த ஒப்பந்தத்தை “முஸ்லிம்கள் மீது எழுதப்பட்ட அடிமைச் சாசனம்” என விமர்சித்து, தேர்தலில் பங்கேற்க முடியாது என மு.கா. தலைவர் அமரர் M.H.M. அஸ்ரப் அறிவித்திருந்தார்.
இத்தேர்தலில் அன்றைய முக்கிய தேசிய கட்சிகள் பங்கேற்கவில்லை. ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) மட்டும் போட்டியிட்டது. அதில் ஒரே ஒருவராக மசூர் மௌலானா தெரிவாகினார்.
அப்போதைய இந்திய உயர்ஸ்தானிகராகவும், வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான உத்தியோகப்பூர்வமற்ற ஆளுநராகவும் இருந்த டி.என். தீக்ஷித், மு.கா. கட்சியை போட்டியிடச் செய்வது இந்திய அரசின் நோக்கமாக இருந்தது.
இதற்காக தீக்ஷித் மற்றும் அஸ்ரப்புக்கு இடையில் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதியில் அஸ்ரப் தேர்தலில் பங்கேற்க சம்மதித்தார்.
இதன் மூலம் மு.கா. சார்பில் 17 உறுப்பினர்கள் தெரிவாகினர். சேகு இஸ்ஸதீன் எதிர்க்கட்சித் தலைவரானார்.
இந்திய அரசாங்கம் இதற்காக மு.கா.விற்கு மூட்டையின்மூட்டை பணமும், பல நூற்றுக்கணக்கான ஆயுதங்களும் வழங்கியதாகவும், அவை கொழும்பில் இருந்து இந்திய அமைதிப்படையினரால் உலங்கு வானூர்தி மூலம் சேகு இஸ்ஸதீனின் அக்கரைப்பற்று இல்லத்தில் கையளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி அதிகாரபூர்வமாக பணம் பெற்ற முதலாவது நிகழ்வாகக் கருதப்படுகிறது.








