2025ஆம் ஆண்டுக்கான இளையோர் ஆசியக் கிண்ண கபடி போட்டி (Asian Youth Games 2025) ஜப்பானின் டோக்கியோ நகரில் தற்போது நடைப்பெற்று வருகிறது. ஆசியாவின் பல நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் பரபரப்பான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நேற்று (அக்டோபர் 20) நடைபெற்ற பெண்கள் கபடி பிரிவு ஆட்டத்தில் இலங்கை – இந்தியா அணிகள் மோதின. இதில் இந்தியா அணி மிகுந்த திறமையுடன் விளையாடி, 73 – 10 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

குறித்த போட்டியில் இலங்கை அணிக்காக பல இளம் வீராங்கனைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்திய நிலையில், மட்டக்களப்பின் கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலயத்தைச் சேர்ந்த தியாகராசா நிஷாளிணி, அணிக்கு தலைவியாகப் பங்காற்றியுள்ளார்.
அத்துடன் அதே பாடசாலையை புஸ்பராசா திருஷ்ஷனா மற்றும் தெய்வேந்திரன் பிதுர்ச்சா ஆகியோரும் வீராங்கனைகளாக விளையாடியுள்ளனர்.

இந்தப் போட்டி அக்டோபர் 15 அன்று ஆரம்பமாகி, அக்டோபர் 25 வரை நடைபெறும் என ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கான இறுதி ஆட்டங்கள் அக்டோபர் 25 அன்று நடைபெறவுள்ளன.
இம்முறை இலங்கை அணியில் மட்டக்களப்பின் கோரகல்லிமடு பகுதியைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள் இடம்பெற்றிருப்பது, மட்டக்களப்பு விளையாட்டு துறைக்கு பெருமை சேர்த்துள்ளதாக உள்ளூர் விளையாட்டு இரசிகர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பின் கோரகல்லிமடு போன்ற கிராமப் பகுதிகளில் இருந்து வந்த மாணவிகளுக்கு, சர்வதேச அளவில் நடைபெறும் இளையோர் ஆசியக் கிண்ண கபடி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல — இது உழைப்பின் வெற்றி, முயற்சியின் பலன், நம்பிக்கையின் சின்னம்.
மணல் வழிகளில் ஓடிய அவர்களின் கால் இன்று சர்வதேச கபடி அரங்கில் பதிந்துள்ளது. கல்வியுடன் விளையாட்டையும் இணைத்து தங்கள் திறமையை வெளிப்படுத்திய இந்த இளம் வீராங்கனைகள், “வாய்ப்பு எங்கிருந்தும் வரலாம் — உழைப்பு இருந்தால் மட்டும் போதும்” என்பதை நிரூபித்துள்ளனர்.
கிராமத்தில் வளர்ந்த ஒரு சிறுமி உலக அரங்கில் தன் நாட்டின் ஜெர்சியை அணிந்து நின்றால் — அது அந்த கிராமத்திற்கும், அந்த நாட்டிற்கும் பெருமை.
அவர்களின் பயணம் இன்னும் முடிவடையவில்லை; இது துவக்கம் மட்டுமே.
இவர்கள் காட்டும் உறுதி, ஒவ்வொரு இளம் மாணவிக்கும் ஒரு செய்தியை வழங்குகிறது —
“நீ எங்கிருந்து வந்தாய் என்பதல்ல முக்கியம்,
நீ எங்கே செல்ல விரும்புகிறாய் என்பதுதான் உன் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.”








