கடந்த பெப்ரவரி மாதம் ஹபரண பிரதேசத்தில் மீனகயா தொடருந்து மோதி ஏழு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அதற்குக் காரணமான தொடருந்து சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் உட்பட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கோரி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவொன்று இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தொடருந்து சாரதிக்கு எதிராக இதுவரை எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அவர் தற்போதுவரை தொடர்ந்து சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யானைகள் தொடருந்து மோதி உயிரிழந்த சம்பவங்கள் குறித்து முறையான விசாரணையை நடத்தி, அந்த தொடருந்து சாரதி மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தொடருந்து அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
நாள் ஒன்றுக்கு உயர்ந்து வரும் யானைகளின் மரணங்களைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தொடருந்து திணைக்கள பொது முகாமையாளருக்கு உத்தரவிட வேண்டும்.
ஓய்வு பெறும் வயதைக் கடந்த தொடருந்து சாரதிகளை கல் ஓயா சந்திப்பில் இருந்து மட்டக்களப்பு தொடருந்து நிலையம் வரையிலும், கல் ஓயா சந்திப்பில் இருந்து திருகோணமலை தொடருந்து நிலையம் வரையிலும் சேவையில் ஈடுபடுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைத் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளருக்கு வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
கே.பிரியதர்ஷினி, எஸ்.ஆர். அதிகாரம், எல்.ஏ.ஆர். சந்திரசாந்த, அனூஷா டேவிட், எல்.வி.ஜே. சந்திரசாந்த ஆகிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர், போக்குவரத்து மற்றும் வீதி அமைச்சின் செயலாளர், வனவிலங்கு திணைக்கள பணிப்பாளர் நாயகம், சுற்றாடல் அமைச்சர், போக்குவரத்து அமைச்சர் உட்பட 12 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து மார்க்கத்தில் இயங்கும் மீனகயா தொடருந்தில் கடந்த பெப்ரவரி 19 அன்று ஏழு யானைகள் மோதின.
சம்பவ இடத்திலேயே ஆறு யானைகள் உயிரிழந்தன.
படுகாயமடைந்த ஒரு குட்டி யானை பின்னர் உயிரிழந்ததாகவும் மனுதாரர்கள் தெரிவித்தனர்.
மார்ச் 3, மே 2 மற்றும் கடந்த ஆகஸ்ட் 7 ஆகிய திகதிகளிலும் யானைகள் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில், மொத்தம் 488 யானைகள் உயிரிழந்தன. இதில் 24 யானைகள் தொடருந்தில் மோதி இறந்தவை.
2024 ஆம் ஆண்டில், மொத்தம் 386 யானைகள் உயிரிழந்தன. இதில் 11 யானைகள் தொடருந்தில் மோதி இறந்தவை.
தொடருந்தில் யானைகள் மோதிய மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், அவற்றைத் தடுக்க தொடருந்து திணைக்கள அதிகாரிகளும் வனவிலங்கு திணைக்களமும் இதுவரை தவறிவிட்டதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.








