இவ்வருட யால் பருவ நெல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ், இதுவரை 5,390 மெற்றிக் தொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் (செயற்பாடுகள்) சமன் திலக பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நெல் கொள்வனவுச் செயற்பாட்டின் பின்னர் இந்த அளவிலான நெல் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொள்வனவு செய்யப்பட்ட நெல்லில் அதிகளவு அம்பாறை மாவட்டத்திலிருந்து பெறப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து மட்டும் 3,148 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து 567 மெற்றிக் தொன் நெல்லும், வவுனியா மாவட்டத்திலிருந்து 620 மெற்றிக் தொன் நெல்லும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
நெல் அறுவடை அதிகரிக்கும் பகுதிகளின் தேவைக்கேற்ப புதிய நெற்களஞ்சியங்களை திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் நெல் கொள்வனவை சீராக முன்னெடுக்க 148 நெற்களஞ்சியங்களை திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







