மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள அரச காணி தொடர்ச்சியாக அத்துமீறி பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதும், அம்முயற்சி முறியடிக்கப்பட்டு வருவதும் யாவரும் அறிந்த விடயமாகும்.
இக் காணி கரையோர இரயில் மார்க்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பொத்துவில் வரை விஸ்தரிப்பதற்காக 1924 ஆம் ஆண்டு சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட அரச காணியாகும். பிபி மட 6054 இலக்க நில அளவை வரைபடத்தில் மேற்படி காணி அரச காணி என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இக் காணி மழை காலத்தில் கல்லடி பகுதியில் பெருகும் வெள்ளநீர் வடிந்தோடி வந்து தேங்கி மட்டக்களப்பு வாவியை சென்றடையும் பிரதான வடிச்சல் ஆகும். அதுமட்டுமின்றி இது ஒரு சதுர்ப்பு நிலமாகவே காட்சியளிக்கிறது. இக் காணியில் மட்டக்களப்பு வாவியின் இரண்டு சங்கிலி அகலமுடைய நீரேந்து ஒதுக்கு, அப்பகுதியில் உள்ள பிரதான வாய்க்காலின் ஒரு சங்கிலி அகலமுடைய நீரேந்து ஒதுக்கு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஒதுக்கு காணிகள் உள்ளடங்குகின்றன. இவற்றை அடையாளப்படுத்தும் எல்லை கற்களும் புலத்தில் காணப்படுகின்றன.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இக்காணிக்கு பலரும் சொந்தம் கொண்டாடி, போலியான காணி உறுதி மற்றும் ஒப்பங்களை பெற்று குறித்த காணியை சுவீகரிக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளதாக கல்லடி வாழ் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த 04.11.2025’ம் திகதி குறித்த காணிக்காக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இரு தனிநபர்களுக்கு இடையே நடந்த வழக்கில் ஒருதரப்பினருக்கு சார்பாக தீர்ப்பு கிடைக்கப்பெற்றதையடுத்து, பதிவாளரினால் குறித்த காணி உங்களுடைய காணி என (ரிட் ஓர்டர்) தீர்ப்பு கிடைக்கப்பெற்ற தரப்பினருக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் அன்றைய நாளே குறித்த காணியை அடைக்கும் வேலையையும் அந்த தரப்பினர் முன்னெடுத்திருந்தனர்.
இதனால் 05.11.2025’ம் திகதி கல்லடி வாழ் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டதோடு, 08.11.2025 அன்று குறித்த கிராம சேவகரினால் இது அரசகாணி என அரச காட்சிப்படுத்தல் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அரச தரப்பால் ஒட்டப்பட்ட காட்சிப்படுத்தலை குறித்த காணியை அடைக்கும் குழுவினர் அங்கிருந்து ஒட்டப்பட்ட காட்சிப்படுத்தலை கிழித்து அகற்றியுள்ளர்.
இது தொடர்பில் கல்லடி வாழ் பொது மகன் ஒருவர் தெரிவிக்கையில், இதற்க்கு சில அரச அதிகாரிகளும் உடந்தை எனவும், அவர்களின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் கல்லடி வாழ் பொதுமக்களின் நிலை தற்போது பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.









