கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் மட்டுமே சட்டபூர்வமான சங்கம் என விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்க தற்போதைய செயலாளர் சு. ஸ்டான்லி பிரஷாந் தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மட்டக்களப்பில் மாவட்டத்திற்கான பூப்பந்தாட்ட மாவட்டச் சங்கம் என்ற ஒரு அமைப்புச் செயல்பாட்டில் இருக்கவில்லை. இதற்கு முன்னர் வரை இருந்த மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்க நிர்வாகமானது கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்துடன் சேர்ந்து செல்ல முடியாது.
எனவே தாங்கள் தனித்து செயல்பட வேண்டும் என கூறிக்கொண்டு இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்துடன் நேரடியாக இணைந்து செயல்படப் போவதாக தெரிவித்துக்கொண்டு, முறையற்ற விதமாக 2025 மே மாதத்தில் இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் உடன் சேர்ந்து கொண்டு தனியாக தங்களது மாவட்டச் சங்கத்தைப் பதிவு செய்ய முயற்சி செய்தனர்.

இதனையடுத்து கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கமானது ( (EPBA) ) மட்டக்களப்பு மாவட்டச் சங்கத்தின் நிர்வாகத்திற்கு தெளிவான விளக்கங்களைக் கூறி, யாப்பின் படி நடக்குமாறு கேட்டிருந்தது. இருப்பினும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல், நாங்கள் தனித்துதான் செயல்படுவோம் என்று முறையற்ற விதத்தில் இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் புது நிர்வாகத்தின் பிழையான உதவியுடன் தங்களது மாவட்டச் சங்கத்தைப் பதிவு செய்ய முற்பட்டனர்.
இதற்கு இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் புதிய தலைமை அனுமதியளிக்க முற்பட்ட போது, அவர்கள் செய்வது தவறு என கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்க நிர்வாகம் இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் பொதுச் சபை கூட்டத்தில் விவாதித்து, இந்தப் பதிவுக்கு இடைக்காலத் தடையை ஏற்படுத்தியது.

இந்த முறையற்ற விஷயத்தை இலங்கை விளையாட்டு அமைச்சுக்கு ( (Sri Lanka Sports Ministry) ) கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்க நிர்வாகம் தெரியப்படுத்தியது. அதன் பிற்பாடு, விளையாட்டு அமைச்சினால் இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிரான விசாரணையில் அவர்கள் செய்தது தவறு என கண்டறிந்தது.

இதனையடுத்து கிழக்கு மாகாணச் சங்கத்தின் சிபாரிசு இல்லாமல் இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏதாவது மாவட்ட சங்கங்கள் கிழக்கு மாகாணத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அதை செல்லுபடியற்றதாக்குமாறு மேன்முறையீட்டுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் அந்த சங்கம் செல்லுபடியற்றது என 20.11.2025 திகதி கடிதம் அனுப்பியுள்ளது.
எனவே கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் வழிகாட்டலுடன் மட்டக்களப்பில் செயற்படும் Batticaloa District Badminton Association (BDBA) மட்டுமே சட்டபூர்வமான சங்கம் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன் அதன் தலைவராக கே.சுரேஸ், செயலாளர் சு. ஸ்டான்லி பிரஷாந், பொருளாளராக ஏ.ஏ.எம்.அஸீம் ஆகியோர் தற்போதைய நிர்வாகத்தினர் என அறியத்தருகின்றோம் என அவர் தெரிவித்தார்.








