பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குச் சேதங்களால், பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கு காரணமாகச் சில இடங்களில் குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, நிர்வாக பீடத்தின் பீடாதிபதி அலுவலகம் நான்கு அடி உயரத்திற்கு வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், அலுவலகக் கதிரைகள், தளபாடங்கள் , உள்ளிட்டவையும் அத்துடன் கணினிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.






மேலும், விவசாய பீடம், கால்நடை மருத்துவ பீடம், மற்றும் பராமரிப்புப் பிரிவுகள் உள்ளிட்ட பல பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, விவசாய பீடத்திற்கு அருகிலுள்ள உத்தியோகபூர்வ குடியிருப்புகளில் வசித்தவர்கள் அனைவரும் பாதுகாப்புக் கருதி தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணத்தில் நிலவும் இந்த அவசரகாலச் சூழ்நிலை காரணமாக, 27ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு உப வேந்தர் வெளியிட்ட அவசர அறிவிப்பின்படி, 28ஆம் திகதி முதல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படுகின்றன.
அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.









