சென்னையில் காலமான அமரர் இராசதுரைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் நேற்று (08) மாலை அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், மாநகரசபை ஆணையாளர் தனஞ்செயன், மாநகரசபை உறுப்பினர்கள்,பிரதி ஆணையாளர்,மாநகரசபை உறுப்பினர்கள் இராசதுரையின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மாநகரசபைக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மாநகரசபை மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. அமரர் இராசதுரை அவர்களின் உருவப்படத்திற்கு மாநகர முதல்வரினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் அமரர் இராசதுரைக்கு அஞ்சலிகுறிப்பொன்றை எழுதும் வகையில் நினைவுக்குறிப்பேடு ஒன்றும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன்போது “முடிசூடா மன்னன் இராசதுரை என்று அழைக்கப்படும் செல்லையா இராசதுரை” அவர்களின் சேவைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான நினைவுரைகளும் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல் முதல்வராக தெரிவுசெய்யப்பட்ட இவர் 1927,யூலை, 27ல் மட்டக்களப்பு நகர் புளியந்தீவில் பிறந்த செல்லையா இராசதுரை அவர்கள் தனது மட்டக்களப்பு அரசடி வித்தியாலயத்தில் (தற்போது மகாஜனகல்லூரி) ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில்உயர்தரக் கல்வியை முடித்தார். இராசதுரை ஊடகவியலாளரும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக முதன் முதலாக தந்தைசெல்வாவால் மட்டக்களப்பு தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம்சென்றார்.
தொடர்ந்து மார்ச் 1960, யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தமிழரசுக்கட்சியிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் ஜே. ஆர். ஜெயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.பின்னர் இவர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.
பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் புலம் பெயர்ந்து மலேசியாவில் சிலகாலம் வாழ்ந்து பின்னர் சென்னையில் வசித்தார்.நேற்று முன்தினம் தினம் தனது 98ஆவது வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை சென்னையில் அவரது இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாக குடும்ப உறவினர்களினால் அறிவிக்க்பபட்டுள்ளது.


























